மதுரை உயிர்ப்போடு இருப்பதற்கு காரணமே மீனாட்சியம்மன் கோயில்தான். அந்த கோயிலுக்கு சேதம் ஏற்பட்டால் மதுரையின் கதை முடிந்துவிடும் என பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.
மதுரையில் “என் ஊர் என் கனவு” என்ற திட்டம் தொடர்பான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா, மதுரை பேருந்து நிலையம் சத்திரம் சாவடி போல மாறிவிட்டதாகவும், நாலாபுறமும் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் கூறினார்.
மதுரையில் இரவோடு இரவாக சாலைகள் அமைக்கப்படுவதாகவும், ஒரே மழையில் அந்த சாலைகள் சேதமடைந்து விடுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மீனாட்சியம்மன் கோயிலில் மழைநீர் தேங்குவது குறித்து வேதனை தெரிவித்த சாலமன் பாப்பையா, முக்கியமான கோயிலில் இப்படி தண்ணீர் தேங்கினால் கட்டடம் என்ன ஆகும் என கேள்வி எழுப்பினார்.
















