இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இஸ்லாமாபாத் உள்நாட்டிற்குள்ளேயே கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானை அமெரிக்கா புறந்தள்ளியது ஏன்?
அமெரிக்காவின் வர்த்தகப் போரையும், ஏதேச்சதிகார போக்கையும் புறந்தள்ளிய இந்தியா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டது… இதன் தாக்கத்தையும், இந்திய சந்தை கைவிட்டுப்போவதையும் உணர்ந்த அமெரிக்கா, இந்தியா மீது அடாவடித்தனமாக விதிக்கப்பட்ட 50 சதவிகித வரியை 18 சதவிகிதமாக குறைத்து வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்தது.
குறிப்பாக அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், பாகிஸ்தான் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது… அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை அடிக்கடி சந்தித்து கைகுலுக்கிக் கொண்டபோதும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்குதம் இந்த ஒப்பந்தம் பேரிடியாக மாறியுள்ளது…. அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரை பரித்துரைத்தது, அமைதி வாரியத்தில் டிரம்ப் இருப்பதை புகழ்ந்து தள்ளியது என பாகிஸ்தான் அதீத அளவில் அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டியபோதும் அந்நாட்டிற்கு 19 சதவிகித வரிவிதிப்பு அமலில் இருக்கிறது…
இந்தியா- அமெரிக்க ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு விழுந்த சம்மட்டி அடி என உள்நாட்டிலேயே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன, பல மாதங்களாக, பாகிஸ்தானின் தொடர்பு எல்லைக்கு அப்பால் அமெரிக்கா இருந்ததாகவும், அதேநேரத்தில் டிரம்பின் அழுத்தத்தை எதிர்கொண்ட இந்தியா, தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று வர்த்தக ஒப்பந்தத்தை நிலைநிறுத்தியுள்ளது..

அண்மையில் பிரதமர் மோடியுடன் தாம் இருக்கும் இந்தியா டுடே அட்டைப்படத்தை ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இந்தியாவை தனது நெருக்கமான கூட்டாளி என குறிப்பிட்டிருந்தார் டிரம்ப்…. இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் இந்தியாவைவிட, பாகிஸ்தானுக்கு வரி விதிப்பானது ஒரு சதவிகிதம் அதிகம் என்பதால், இஸ்லாமாபாத்தின் ஜவுளி, ஆடைகள் போன்றவை அமெரிக்க சந்தையில் கடும் போட்டியை எதிர்கொள்ள நேரிடும் என்ற பாகிஸ்தான் ஏற்றுமதியாளர்கள் புலம்ப தொடங்கிவிட்டனர்..
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஹம்மத் அசார், இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் தோல்வி என்று பதிவிட்டுள்ளார்… 21ம் நூற்றாண்டில் வெளியுறவுக் கொள்கை என்பது தனிப்பட்ட உறவுகளை பற்றியது அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், பொருளாதார வலிமை, வரிகள், சந்தை அணுகலை பற்றியது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் அண்மைக்கால வர்த்தக ஒப்பந்தங்கள் வளமான வெளியுறவுக் கொள்கையை பிரதிபலிப்பதாகவும் கூறியுள்ளார்… இந்தியா சுயசார்பு நிலைப்பாட்டில் இருந்து பேச்சுவார்த்தையை நடத்தியதாக கூறும் பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள், ஆனால், பாகிஸ்தான் தலைமையானது தனிப்பட்ட ஈடுபாட்டையே பெரிதும் நம்பியிருந்ததால், பாதகமான சூழலுக்கு தள்ளப்பட்டதாக விமர்சிக்கின்றனர்… ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதாரம் தள்ளாடி வரும் நிலையில், இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தம் பாகிஸ்தானில் பொருளாதார சிக்கலை மேலும் அதிகப்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்..
















