தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் மணிப்பூரை சேர்ந்த இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 2021 சட்டசபைத் தேர்தல் வரை கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின் போது நாதகவுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இருப்பினும் மக்களவை தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி, 8.19 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.
இந்நிலையில் கடந்த 2016 முதல் 2021 வரை நாம் தமிழர் கட்சியினர் போட்டியிட்டு வந்த கரும்பு விவசாயி சின்னம், இந்திய குடியரசு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மணிப்பூரை சேர்ந்த இந்த கட்சி தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டசபைத் தேர்தலின் போது நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ள கலப்பை விவசாயி சின்னமும், கரும்பு விவசாயி சின்னமும் அருகருகே இருந்தால், வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
















