மதுரையில் அமைய உள்ள வ.உ.சிதம்பரனாரின் 140 அடி உயர சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
மதுரை கப்பலூரில் தனியார் கல்லூரி வழங்கியுள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் ஏ.சி.எஸ்., அறக்கட்டளை சார்பில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வ.உ.சி-யின் 140 அடி உயர சிலை அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வண்டியூர் பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இயக்குநர் சுந்தர் சி, நடிகர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத்தொடந்து , குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், 140 அடி உயரத்தில் அமைய உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, தனது சொத்துக்கள் அனைத்தையும் நாட்டுக்காக இழந்தவர் என்றும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பலை இயக்கி, இந்தியாவின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கு வித்திட்டவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
யாருக்குமே வழங்கப்படாத சிறை தண்டனை வ.உ.சி-க்கு கொடுக்கப்பட்டதாகவும், ஆங்கிலேயர் கொடுமைப்படுத்தியும் வந்தே மாதரம் என முழங்குவதை வ.உ.சி நிறுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
















