தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 4 வேட்பாளர்களையும், அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களையும் நிறுத்த முடியும்.
இதன்படி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் தம்பிதுரையும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க சார்பில் அன்புமணியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், தம்பிதுரை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம், தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பா.ம.க சார்பில் போட்டியிடும் அன்புமணி, அதிமுக-வை சேர்ந்த கே.பி.முனுசாமி முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒரு இடமும், தேமுதிகவுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். தமிழகத்தில் இருந்து அதிமுக, திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் 6 பேரும் போட்டியின்றி தேர்வாக உள்ளது உறுதியாகியுள்ளது.
















