சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்குவதை முன்னிட்டு மதுரை மாநகரில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் துணை ராணுவ படையினர் மதுரைக்கு வருகை தந்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு, வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் துணை ராணுவப்படையினரின் பாதுகாப்பு அணிவகுப்பு நடைபெற்றது.
மதுரை பீபி குளம் தொடங்கி நரிமேடு வழியாக கோரிப்பாளையம் பகுதி வரையிலும், சிம்மக்கல் வைகையாற்று கரையோரம் தொடங்கி ஓபுளாபடித்துறை சந்திப்பு பகுதி வரை என மாநகரின் பல்வேறு பகுதிகளில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடைபெற்றது. மதுரை மாநகர காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவ படையினர் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பாக சென்றனர்.
















