விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதற்கு பெயர் பெற்ற கட்சி திமுக என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திருச்சி பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பிரதமர் மோடிக்கு கூட்டணி தலைவர்கள் அனைவரும் இணைந்து நினைவு பரிசினை வழங்கினர்.
பின்னர் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, அறிவியல் ரீதியாக ஊழல் செய்வதற்கு பெயர் பெற்றது திமுக எனக் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில், அனைத்தும் ஒரு குடும்பத்தில் இருந்து தொடங்கி ஒரே குடும்பத்துடன் முடிந்து விடுதாகவும் அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் சிறுமிகள் தொடங்கி மூதாட்டிகள் வரை பெண்கள் யாருக்கும் பாதுகாப்பு இல்லை எனக் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியும் நிலை உருவாகும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மேற்காசியாவில் நடக்கும் போரால் எரிசக்தி விநியோக சங்கிலி சிதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதேபோல் தமிழக மக்கள் யாரும் எரிபொருள் தட்டுப்பாடு பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் முன்னுரிமை என்ற கொள்கையை மத்திய அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.
















