சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் சுமார் 700 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்காவின் மிக முக்கிய வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பான அவாக்ஸ் AWACS விமானம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. ஈரான் போரில் அமெரிக்காவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒரு மாதத்துக்கு மேலாக தொடரும் ஈரான் போரால், உலக எண்ணெய் மற்றும் எரிபொருள் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவுடன் ஈரான் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஒப்பந்தத்துக்கு ஈரான் ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் அந்நாடு மோசமான விளைவுகளைச் சந்திக்கும் என்று எச்சரித்திருந்தார்.
இதற்கிடையே சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பாகிஸ்தானில் சந்தித்துப் போரை நிறுத்த முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதே வேளையில், மேற்கு ஆசியாவில் ஈரான் மீது தரைவழித் தாக்குதலை நடத்தவும் ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் தீவைக் கைப்பற்றவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் பிரமாண்டமான ‘யுஎஸ்எஸ் திரிபோலி’ (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்ததாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக, ஈரானின் அரசு நாளிதழான ‘தி டெஹ்ரான் டைம்ஸின் முதல் பக்கத்தில் “நரகத்துக்கு வரவேற்கிறோம் எனத் தலைப்பிட்டு, ஈரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டியில்தான் திரும்புவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை எந்தவொரு தரைவழிப்படையும் இல்லாமலேயே அமெரிக்கா தனது போர் இலக்குகளை அடைய முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, சவூதி தலைநகர் ரியாத்தில் இருந்து 96 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தைக் குறிவைத்து ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 29 ட்ரோன்களையும் ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில், இந்த விமானப் படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் மிக முக்கிய வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பான E-3G Sentry அவாக்ஸ் (AWACS) விமானங்கள் ஆறில் ஒன்று முற்றிலும் உருக்குலைந்தது.
இந்த E-3 அவாக்ஸ் விமானம், ஏவுகணைகள் மற்றும் விமானங்களைக் கண்காணிக்கவும், போர்க்கள நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தப்படும் வான்வழி முன் எச்சரிக்கை விமானமாகும்.
“வானத்தில் அமெரிக்காவின் கண்” என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் மிக முக்கியமான உளவு மற்றும் வழிகாட்டுதல் விமானம் இதுவாகும்.
எரிபொருள் நிரப்பத் தேவைப்படாமலேயே எட்டு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து வானில் பறக்கும் திறன் கொண்டதாகும்.
இக்காரணங்களினாலேயே, அமெரிக்காவின் வழக்கமான ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற சொத்துக்களில் ஒன்றாக E-3 AWACS விமானம் கருதப்படுகிறது.
1977-ல் உருவாக்கப்பட்ட அவாக்ஸ் AWACS விமானங்கள், ‘Operation Desert Storm’, கொசோவோ போர், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள், மற்றும் ‘Operation Inherent Resolve’ என்றழைக்கப்படும் இஸ்லாமிய அரசுக்கு (IS) எதிரானப் போர் எனப் பல முக்கியப் போர்களில் தீர்க்கமானவெற்றியை அமெரிக்காவுக்குப் பெற்று தந்துள்ளது.
இந்த விமானத்தின் உட்புறத்தில் அமைக்கப் பட்டிருக்கும் ரேடார் 375 கிலோமீட்டருக்கும் அதிகமான வரம்பைக் கொண்டிருப்பதால் எதிரி நடவடிக்கைகளை குறித்த சூழ்நிலை விழிப்புணர்வையும், ஒரு குறிப்பிட்ட பொறுப்புப் பகுதியின் மீதான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டையும் துல்லியமாக வழங்கிறது.
அமெரிக்க விமானப்படையிடம் தற்போது பதினாறு E-3 Sentry அவாக்ஸ் விமானங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ஈரானின் இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வான்வழி கண்காணிப்புத் திறனைப் பெருமளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
இத்துடன் KC-135 ரக எரிபொருள் நிரப்பும் பல விமானங்களும் ஈரானின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த 15 அமெரிக்கப் படையினரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈரான் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு சேதத்தின் அளவு அல்லது உயிரிழப்புகளை உறுதிப்படுத்தும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
போர் தொடங்கியதில் இருந்தே அமெரிக்கா குறிப்பிடத்தக்க ராணுவ இழப்புகளை சந்தித்து வருகிறது. ஈரானின் தாக்குதலில் 12 MQ-9 ரீப்பர் ட்ரோன்களை அமெரிக்கா இழந்துள்ளது. ஒரு அமெரிக்க F-35 ஸ்டெல்த் போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.
















