பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களின் எல்லைகளை மாற்றவும், அரியானாவின் தலைநகரை மாற்றவும் உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் தலைநகரங்களையும், உயர் நீதிமன்றங்களையும் மாற்றுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஜலந்தரில் பஞ்சாபிற்கு தனி உயர் நீதிமன்றமும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
தற்போது பஞ்சாப் மற்றும் அரியானா இரண்டும் பொதுவான உயர்நீதிமன்றத்தை பகிர்ந்து கொள்கின்றன.
இந்த வழக்கு தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் சிங் மற்றும் நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது, நாடு அல்லது மாநில எல்லைகளை மாற்ற நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் இது நாடாளுமன்றத்தின் பிரத்யேக அதிகார வரம்பு என்றும் கூறி மனுவை நிராகரித்தனர்.