பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு சென்னை காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அன்னதானம் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : பாஜக மற்றும் அதை சார்ந்த அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி சேவை விழாவாக செய்து வருகிறோம். விநாயகர் சதுர்த்தியை மதம் சார்ந்த விழாவாக பாஜக பார்க்கவில்லை. மனிதம் சார்ந்த கொள்கை தான் பாஜகவின் கொள்கை. இந்து மதம் சார்ந்த கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் எதிர்த்து குரல் கொடுப்பவர்களாக நாங்கள் இருக்கிறோம்.
ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு சென்று நாட்டைப் பற்றி மோசமாக பேசியுள்ளார் இதை வன்மையாக கண்டிக்கிறோம். ராகுல் காந்தி இந்தியன் போல பேசவில்லை. அந்நியன் போல பேசியுள்ளார்.பெண்களைப் பற்றி தவறாக பேசிய ராகுல் காந்தி நாட்டில் உள்ள அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்..
மத்திய நிதியமைச்சர் , குடியரசு தலைவர் என பெண்களுக்கு பல இடங்களில் பாஜக முன்னுரிமை அளித்து வருகிறது. இங்குள்ள பெண்கள் சமையல் அறையில் இருக்கிறார்கள் என ராகுல் காந்தி பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம்.
திருமாவளவன் மதுவைப் பற்றி பேசும்போது ஏன் மதத்தைப் பற்றி பேச வேண்டும்.திமுக கூட்டணியில் இருந்தால் 2026 வெற்றி கிடைக்காது என்பதை திருமாவளவன் புரிந்து கொண்டு விட்டார்
திருமாவளவன் நடத்தப் போகும் மாநாடு மதுவுக்கு எதிரான மாநாடா அல்லது கூட்டணிக்கு எதிரான மாநாடா என்பது புரியவில்லை. திமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகள் திமுகவின் மீது உள்ள நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என தமிழிசை தெரிவித்தார்.