நெல்லை மாவட்டத்தில் 81 பள்ளிகளில் மாணவர்கள் குடிக்க தண்ணீர் வசதிகூட இல்லாதது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகி உள்ளது.
நெல்லையில் கடந்த 2021 டிசம்பரில், அரசு உதவி பெறும் சாப்டர் பள்ளியில், கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, அப்போதைய மாவட்ட ஆட்சியர் 18 குழுக்கள் அமைத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 535 பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டதில், நூறு பள்ளிகளின் கட்டிடங்கள் மோசமாக இருப்பது தெரிய வந்தது. மேலும், அத்தகைய பள்ளிகளுக்கு மாற்றுக் கட்டடங்கள் ஏதும் தயார் செய்யப்படவில்லை என்பது ஆடிஐ மூலம் தெரிய வந்துள்ளது.
81 பள்ளிகளில் மாணவர்கள் குடிப்பதற்கு கூட சரியான தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளதும், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம் ஆகியுள்ளது. மோசமான பள்ளிகளை இடிப்பதற்கும் அதனை மறு சீரமைப்பு செய்வதற்கும் தமிழ்நாடு அரசு சார்பில் எந்த நிதியையும் நெல்லை மாவட்டத்திற்கு ஒதுக்கப்படவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.
பள்ளிகளை கவனிக்காமல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் “அப்பா” செயலியை அறிமுகப்படுத்தி என்ன பயன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.