மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுவாமி தரிசனம் செய்தார்.
பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவு மதுரைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிந்தாமணியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கினார். அவரை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர், விடுதியில் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்வதற்காக மீனாட்சியம்மன் கோயிலை அமித்ஷா வந்தடைந்தார்.
அவரை மதுரை ஆதினம் வழியில் சந்தித்து வரவேற்றார். பின்னர் சுவாமி தரிசனம் செய்த அமித்ஷாவுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. முன்னதாக அமித்ஷா வருகையையொட்டி ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கிழக்கு கோபுர பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.