மத்திய அரசின் திட்டங்களை தங்களுடையதாக ஸ்டிக்கர் ஒட்டி பழகிப்போனவர் முதலமைச்சர் ஸ்டாலின் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற செய்தி முதலமைச்சருக்கு கிலி ஏற்படுத்தி உள்ளதாக விமர்சித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தை 2026 தேர்தலுக்கு பயன்படுத்த முடியாதே என்ற வருத்தம் ஸ்டாலின் பதிவில் தெரிவதாக குறிப்பிட்டுள்ள எல்.முருகன், மதுரை எய்ம்ஸ் உட்பட எந்தவொரு திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக அரசு நிலம் ஒதுக்கீடு செய்யாததால் ரயில்வே உட்பட எத்தனையோ துறை சார்ந்த திட்டங்கள் முடங்கி உள்ளதாக தெரிவித்துள்ள எல்.முருகன், தமிழகத்தில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தாத ஸ்டாலின், மக்கள் நலத்திட்டங்களை பற்றி பேச தார்மீக உரிமையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் மக்கள் வேதனையில் தவிக்கின்றனர் என்று தெரிவித்துள்ள எல்.முருகன், என்டிஏ கூட்டணி விரைவில் வெளிச்சம் தரும் என தெரிவித்துள்ளார்.