இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை மிகத் தீவிரமாகக் கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பதற்கு முன்னதாக, பிரதமர் மோடி ட்ரம்புடன் தொலைப்பேசியில் பேசியுள்ளார். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் இருநாடுகளுக்கும் இடையே எந்த நாடும் எந்த மத்தியஸ்தமும் செய்ய வேண்டிய தேவையில்லை என்றும் பிரதமர் மோடி உறுதியாக தெரிவித்துள்ளார். அது பற்றி விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இஸ்ரேல்- ஈரான் மோதல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில் இருந்து பாதியிலேயே அவசர அவரசமாக அமெரிக்காவுக்குத் திரும்பினார். இதனால், ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி-அதிபர் ட்ரம்ப் சந்திப்பு நடைபெறவில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி 35 நிமிடங்கள் தொலைப்பேசி மூலம் பேசியதாகத் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி, இரு தலைவர்களும் தொலைப்பேசி வாயிலாகப் பேசுவதற்கான முயற்சியை வெள்ளை மாளிகை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.
இந்த உரையாடலில், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக ட்ரம்பிடம் தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார். இதில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் திட்டவட்டமாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கனடாவிலிருந்து நாடு திரும்பும் வழியில் அமெரிக்காவுக்கு வரவேண்டுமென்ற ட்ரம்பின் அழைப்பை ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் காரணமாக நிராகரித்த பிரதமர் மோடி, அடுத்த ஆண்டு நடக்கும் குவாட் மாநாட்டுக்கு வருமாறு அமெரிக்க அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தீவிரமாகக் கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதியை அமெரிக்க அதிபர் சந்தித்தது சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஓரங்கட்டப்பட்ட நிலையில், ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் இராணுவத் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு, பாகிஸ்தானில் “ஜனநாயகம்” இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும், மக்களின் நலனுக்காக அல்லாமல், தனது அதிகாரத்துக்கும் உயிருக்கும் பாதுகாப்பு வேண்டி அமெரிக்க அதிபரை அசிம் முனீர் சந்தித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரையும் அசிம் முனீர் சந்தித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் அரசு மிகப் பலவீனமாக உள்ளது. கெஞ்சிக் கூத்தாடி,IMF யிடம் 8000 கோடி கடன் தவணையைப் பெற்றுள்ளது.
உண்மையில், பாகிஸ்தானின் சக்தி ,அந்நாட்டு இராணுவத்திடம் உள்ளது. அதனால் தான்,பாகிஸ்தான் இராணுவத் தலைமை தளபதியை ட்ரம்ப் சந்தித்துள்ளார். இதன் மூலம்,பாகிஸ்தானின் இராணுவத் தலைமைக்கு அல்லது இராணுவ ஆட்சிக்கு ட்ரம்ப் தெரிந்தே அங்கீகாரம் அளிக்கிறார்.
இஸ்ரேல்- ஈரான் போர் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்காவின் புதுப்பிக்கப் பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த ஈரான், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது. ஆசியாவில் புவியியல் ரீதியாகப் பாகிஸ்தான் தனது எல்லைகளை ஈரானுடன் பகிர்ந்து கொள்கிறது. அதனாலேயே ட்ரம்பின் பார்வை பாகிஸ்தான் மீது விழுந்துள்ளது.
பல ஆண்டுகளாகவே, சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் மூலம், பாகிஸ்தானை அரபிக் கடலுக்குத் தனது நுழைவாயிலாகவும், தனது இராணுவ-தொழில்துறைக்கு நிரந்தர வாடிக்கையாளராகவும், விசுவாசமுள்ள நட்பு நாடாகவும் பாகிஸ்தானைச் சீனா ஒரு நாய்க் குட்டி போல் வளர்த்து வருகிறது. சீனாவைப் போலவே,ஈரானும் பாகிஸ்தானைத் தான் செல்லப் பிள்ளையாக ஆதரவளித்து வருகிறது.
சீனா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளிடம் இருந்து பாகிஸ்தான் அமெரிக்காவுக்குச் சாதகமாகச் செயல் பட ட்ரம்ப் வலை விரித்துள்ளார். இதில் பாகிஸ்தானின் இராணுவத் தளபதி அசிம் முனீர் சிக்கிவிட்டார் என்றே கூறப்படுகிறது. இன்னொரு புறம் ட்ரம்ப் , பலுசிஸ்தானின் பரந்த கனிம வளங்கள் மீது கண்வைத்துள்ளார். பலுசிஸ்தானில், அறியப்பட்ட 17 அரிய பூமி தனிமங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரிய பொக்கிஷத்தைச் சீனா கைப்பற்றுவதைத் தடுக்க அசிம் முனீரை பயன்படுத்த நினைக்கிறார் ட்ரம்ப்.
கூடுதலாக, இஸ்ரேல் ஈரான் போரில்,அமெரிக்கா களம் இறங்கினால், பாகிஸ்தானின் நிலப்பரப்பில் கால் ஊன்றி ஈரானைத் தாக்கலாம் என்றும் ட்ரம்ப் கணக்கு வைத்திருக்கிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த திட்டங்களை எல்லாம் நன்கு அறிந்த நிலையில், ட்ரம்ப்– அசிம் முனீர் சந்திப்புக்கு முன்னதாக, ட்ரம்பிடம், எந்த நாட்டின் மத்தியஸ்தமும் இந்தியாவுக்குத் தேவையில்லை என்றும், பாகிஸ்தானை அதன் சொந்த விதிமுறைகளின்படி எவ்வாறு கையாள்வது என்பது இந்தியாவுக்குத் தெரியும் என்றும் பிரதமர் மோடி தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஆதரவை ஒரு பாதுகாப்பு வலையாக வைத்துக் கொண்டு இந்தியா மீது மேலும் தாக்குதல்களை நடத்தப் பாகிஸ்தான் முயற்சித்தால், இந்தியாவின் பதிலடி தாங்க முடியாததாக அமையும். அந்த பேரழிவிலிருந்து அமெரிக்கா உட்படக் கூட எந்த வல்லரசாலும் பாகிஸ்தானைப் பாதுகாக்க முடியாது என்பது தான் உண்மை.