ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை திமுக அரசு வேட்டையாடியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு தகுதியற்ற நபர்களைப் பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி நடந்துள்ளது திமுக ஆட்சியில் ஊழல் வேரூன்றி இருப்பதை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு 2,538 காலிப் பணியிடங்களுக்கு 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தங்கள் சொந்த பாக்கெட்டுகளை நிரப்ப ஒரு காலிப் பணியிடத்திற்கு ₹35 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு, தகுதியற்ற நபர்களைப் பணியமர்த்தி, பல்லாயிரக்கணக்கான திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் திராவிட மாடல் அரசு. பறித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரு மாதங்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலின் சொந்தக் கரங்களால் பணியாணை வழங்கப்பட்ட பணித்தேர்விலேயே இத்தகைய முறைகேடு நடந்திருக்கும் நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் இது போன்ற எத்தனை மோசடிகள் நடந்திருக்கும் என யோசிக்கையில் மலைக்க வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல் செய்து தமிழகத்தின் கஜானாவைக் காலி செய்தது போதாதென்று, தற்போது நேர்மையான தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி வரும் அறிவாலய அரசின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
















