இலங்கையில் வெள்ள நிவாரணப் பணிகளின் போது, இந்தியாவின் NDRF குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், பச்சிளங் குழந்தையை மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயற்கை பேரிடர்களால் உலக நாடுகள் தள்ளாடும்போது, அந்த நாடுகளுக்குத் தன்னாலான உதவிகளை செய்வதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது.
அது எதிரி நாடாகவே இருந்தாலும், உதவி என்று வந்துவிட்டால் முதல் ஆளாக அவர்களுக்குக் கைகொடுப்பது இந்தியாதான். மற்ற நாடுகளுக்கு இந்தியா மீது நன்மதிப்பு ஏற்படுவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.
இந்நிலையில் தான், தமிழகத்தை நோக்கி நகர்ந்த டிட்வா புயல், முன்னதாக இலங்கையை முற்றிலுமாகப் பதம் பார்த்தது. கனமழை மற்றும் நிலச்சரிவால் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், காணாமலும் போயுள்ளனர்.
இத்தகைய சூழலில் இலங்கைக்கு உதவ முன்வந்த பிரதமர் மோடி, அந்நாட்டிற்கு தேவையான நிவாரணப் பொருட்கள் மற்றும் தேசிய மீட்புப் படையினரை அனுப்பிவைத்தார்.
இலங்கையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், மீட்புப் படையை சேர்ந்த பெண் ஒருவர், பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து பச்சிளங் குழந்தையை மீட்டு, அதனை தூக்கி கொஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மீட்புப் படையில் சேர்ந்து எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றிய அந்தப் பெண்ணின் முகத்தில், புதிதாக வாழ்க்கையை தொடங்கும் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மகிழ்ச்சி அலாதியாகத் தெரிகிறது.
















