மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, மாநகர காவல் ஆணையரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியினர் கடிதம் வழங்கினர்.
மதுரையில் வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடன் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.
அப்போது பாஜக சார்பில் பேராசிரியர் ராம சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ராம சீனிவாசன், வரும் 23-ம் தேதி மதுரை அம்மா திடலில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து தலைவர்களும் பங்கேற்பார்கள்
என தெரிவித்தார். மேலும், பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைவு எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி என தெரிவித்தார்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிடுவார் எனவும் தெரிவித்தார்.
















