ஜம்மு – காஷ்மிரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.
ஜம்மு – காஷ்மிர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சிங்க்புரா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவ வீரர்கள் மற்றும் மாநில காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து “ஆப்ரேஷன் டிராஷி ஒன்” என்ற பெயரில் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, உயரமான மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
இதில், ராணுவ வீரர்கள் 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் சிறப்புப் படை வீரரான ஹவில்தார் கஜேந்திர சிங் என்பவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார்.
இவரது தியாகத்திற்கு ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பயங்கரவாதிகளைப் பிடிக்க அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
















