தஞ்சையில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றிட வலியுறுத்தி இன்று கும்பகோணம் சென்ற தமிழக முதல்வருக்கு வேம்பக்குடி சுங்கச்சாவடி அருகே கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளை திமுக அரசு அடக்குமுறையை கையாண்டு கைது செய்துள்ளதை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
டெல்டாகாரன் என்று தனக்கு தானே பட்டம் சூட்டிகொண்ட முதல்வர் ஸ்டாலின்
விவசாயிகள் பற்றிய அக்கறையோ, சிந்தனையோ இல்லாமல் இருப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாமல் இருப்பது, தங்கள் நிலங்களைக் காக்கப் போராடிய திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடுவது என இந்த 60 மாதங்களில் விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே செய்துவரும் திமுக அரசு, ஆட்சி முடியும் தருணத்திலும் அதையே தொடர்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து ஆயிரம் நாட்களுக்கும் மேலாக தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடிவரும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்து, இந்தப் பிரச்சினை தொடர்பாக, விவசாயிகள் மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என, திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
















