சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பதக்கம் பெறும்போது, திடீரென அவரது காலில் விழுந்து மாணவி ஆசி பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 12-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் கோவையைச் சேர்ந்த சசிகலா என்ற மாணவி, எம்.எட். பட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்துத் தங்கப்பதக்கம் வென்றார்.

அவர் மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பதக்கம் பெறும்போது, திடீரென காலில் விழுந்து ஆசி பெற்றார். இது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாணவி சசிகலா, ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்கு மிகப்பெரிய ரோல் மாடல், கடவுள் போன்றவர் எனவும் அதனால்தான் காலில் விழுந்து வணங்கியதாகவும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுக்கும் மாணவர்களுக்குத் தமிழக அரசு நேரடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் அப்போதுதான் மாணவர்கள் இன்னும் ஆர்வத்துடன் படிப்பார்கள் எனவும் கூறினார்.
















