தைப்பூசத் திருநாளையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரலாறு காணாத வகையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. தைப்பூசத்தையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய கைகளில் அடையாள அட்டை அணிவிக்கபட்டு தனிவரிசையில் அனுமதிக்கப்பட்டனர்.
3 அடி முதல் 22 அடி வரையிலான அலகுவேல் குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் திருச்செந்தூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
















