செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 2 நாட்கள் நடைபெறும் “உலகளாவிய சுற்றுலா” உச்சி மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 22 ஆயிரத்து 794 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், மாமல்லபுரத்தில் 2 நாட்கள் நடைபெறும் “தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா” மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது சுற்றுலா நிறுவனங்களின் சார்பில் வைக்கப்பட்ட அரங்குகளை முதலமைச்சர் பார்வையிட்டார். பின்னர் சுற்றுலாத்துறையில், 22 ஆயிரத்து 794 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகின.
இதன் மூலம் 65 ஆயிரத்து 937 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிக்கப்பட்டுள்ளது. பின்னர் சுற்றுலா மேம்பாட்டுக்காக 40 கோடியே 25 லட்சம் செலவில் முடிவுற்ற பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது எனவும், கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக 612 கோடிய 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மாமல்லபுரத்தில் சிறப்பு பகுதி மேம்பாடு ஆணையம் அமைக்கப்பட்டு, 100 கோடி ரூபாயில் நவீன சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் செய்துதரப்படும் என அவர் தெரிவித்தார்.
















