முருகப்பெருமான் பக்தி பாடலை இழிவுபடுத்தி பாடியதாக பாடகர் வேல்முருகன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட 4 பேர் மீது நெல்லை மாநகர காவல் அலுவலகத்தில் இந்து முன்னணி நிர்வாகி புகார் அளித்துள்ளார்.
நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் மாநகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், தவெக 3ஆம் ஆண்டு துவக்க விழாவில் மருதமலை மாமணியே முருகையா என்ற பாடலை பாடகர் வேல்முருகன் இழிவுபடுத்தி பாடியதை சமூக வலைதளத்தில் பார்த்து வேதனையடைந்ததாக கூறியுள்ளார்.
இந்த பாடல் முருக பக்தரான தனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது என்றும், மத மோதலை ஏற்படுத்தும் நோக்கத்திலும் வேற்று மதத்தை சார்ந்த நடிகர் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தூண்டுதலின்பேரில் வேல்முருகன் முருகன் பக்தி பாடலை மாற்றி பாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், முருக பக்தி பாடலை வேண்டுமென்றே இழிவுபடுத்தி பாடிய பாடகர் வேல்முருகன், அதற்கு காரணமான ஜோசப் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றலாநாதன் வலியுறுத்தியுள்ளார்.
















