இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கான பரஸ்பர வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடியுடன் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் தனது சிறந்த நண்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, நாட்டின் சக்தி வாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர் என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்,
வர்த்தகம், ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதித்ததாகவும் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு அமெரிக்காவிடம் கூடுதலாக எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாகவும், வெனிசுலாவிடம் இருந்தும் வாங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தற்போது நடக்கும் உக்ரைன் போரால் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதை நிறுத்த உதவும் என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்,
பிரதமர் மோடி மீதான மரியாதை , நட்பு காரணமாகவும், அவரது கோரிக்கையின் பேரிலும் இந்தியா – அமெரிக்கா இடையே உடனடியாக அமலுக்கு வரும் வகையில் வர்த்தக ஒப்பந்தத்திற்கு தாங்கள் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறையும் என்று சுட்டிக்காட்டியுள்ள ட்ரம்ப்,

அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா பூஜ்ஜியமாக குறைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்க பொருட்களை கூடுதலாக வாங்க மோடி உறுதிபூண்டுள்ளதாக கூறியுள்ள ட்ரம்ப், 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி சார்ந்த பொருட்களை இந்தியா வாங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா உடனான நட்பு சிறப்பானதெனக் கூறியுள்ள ட்ரம்ப், வரும் காலங்களில் இது மேலும் வலுப்பெறும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தானும், பிரதமர் மோடியம் காரியங்களைச் சாதிப்பவர்கள் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். (OUT)
















