வட மாநிலத்தவர்களின் வேலைவாய்ப்பு குறித்து சர்ச்சையாக பேசிய தமிழக அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வடஇந்தியர்கள் பானிபூரி விற்கவும், கட்டட வேலைக்கும், டேபிள் துடைக்கவும் வருவதாக பேசியிருந்தார். வட மாநிலத்தவர்களின் வேலைவாய்ப்பு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ள திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
எக்ஸ் பக்கத்தில் பாஜக எம்பி முரளிதர் மொஹோல் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் உள்ள ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த மக்களும் வடக்கிலும், தெற்கிலும் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். திமுக அமைச்சரின் பேச்சு தற்செயலானது அல்ல எனக்கூறியுள்ள அவர், திமுக அமைச்சர்கள் தொடர்ச்சியாக வடஇந்தியர்களை கேலி செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் அப்பாவிப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நேரத்தில், அமைச்சரின் இத்தகைய பேச்சுகள் பொறுப்பற்றவை மற்றும் ஆபத்தானவை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேச ஒற்றமையை விட கூட்டணிதான் முக்கியமானதா என இண்டி கூட்டணி தலைவர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ள பாஜக எம்பி, இந்தியர்களை பிளவுப்படுத்துவதுதான் இண்டி கூட்டணியின் சமூக நீதிக்கான கருத்தா என வினவியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தியாளரிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ், திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார். கல்வி, தொழில்நுட்பம், தொழில்மயமாக்கல் மற்றும் சேவைத்துறையில் வட இந்தியாவை விட தென் இந்தியா முன்னணியில் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டாலும், திமுக அமைச்சரின் பேச்சு கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
















