காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்க காங்கிரஸ் மாபெரும் வரலாற்றுப் பிழையை இழைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றவிருந்த பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் தொடுக்க சதித் திட்டம் தீட்டியதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுநாள் வரையிலும் சொந்தக் கட்சிக்குள் மாறி மாறி அடிதடி போட்டுக் கொண்டிருந்த காங்கிரஸார், இன்று நமது நாட்டின் அதிகாரமிக்க பொறுப்பில் இருக்கும் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களையே குறி வைக்குமளவிற்குத் துணிந்திருப்பது மிகவும் ஆபத்தான குறியீடு என்றும் அவர் கூறியுள்ளார்.
போட்டியிடும் இடங்களில் எல்லாம் தொடர் தோல்வியை சந்தித்ததன் விளைவாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, பாராளுமன்றத்திற்குள் அதற்குப் பழி தீர்க்க முயன்ற காங்கிரஸ் எனும் சமூகவிரோத அமைப்பை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூளியுள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டபாரதப் பிரதமருக்கு எதிராக இப்படியொரு சட்டவிரோத செயல்பாட்டிற்குத் துணை போன அத்தனை காங்கிரஸ் எம்பிக்களும் கூண்டோடு பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்! இல்லையேல் தமிழக பாஜக சார்பாக பெரும் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நயினார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
















