தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் இடையிலான மோதல் போக்கு வலுக்கத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை திமுக கைப்பற்ற முயற்சிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் இண்டி கூட்டணிக்கு திமுக தலைமை வகித்து வந்தாலும் புதுச்சேரியை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி தான் தலைமை வகித்து வருகிறது. தற்போது புதுச்சேரியில் காங்கிரசை ஒதுக்கிவிட்டு இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்க திமுக முடிவு செய்துள்ளது. அதோடு திமுகவின் புதுச்சேரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திமுக ஆட்சியை அமைப்போம் என முழங்கியிருப்பது அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
2000மாவது ஆண்டுக்கு பின்னர் புதுச்சேரியில் திமுக ஆட்சியோ, திமுக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியோ தற்போதுவரை நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுகவின் ஆட்சியை அங்கு அமைக்கும் வகையில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெகத்ரட்சகன் அவ்வப்போது புதுச்சேரிக்கு சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை மட்டும் தவிர்த்துவிட்டு மற்ற கட்சிகளுடன் ஜெகத்ரட்சகன் பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக தரப்பில் 6 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 2 எம்எல்ஏக்களும் உள்ளனர். வீழ்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமையை கூட்டணிக் கட்சிகளே ஏற்கத் தயாராக இல்லாத நிலையில், தலைமைப் பொறுப்பை கையகப்படுத்த திமுக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு கூட்டணிக்கு திமுக தலைமை தாங்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலும் அதற்கான பணிகளை திமுக தொடங்கியிருப்பது காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்ற திமுக தலைமை முயற்சி செய்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் அத்தகைய பணிகளை திமுக தொடங்கியிருப்பது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என்ற விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. தமிழகத்தில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும், ஆட்சியில் பங்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பிரச்னையை தொடங்கி வைத்த காங்கிரஸ் எம் பி மாணிக்கம் தாகூரே தற்போதும் புதுச்சேரி பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ள அவர், 2014 தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி 26 சதவிகித வாக்குகளை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி, கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டுமா ? அல்லது 8 சதவிகித வாக்குகளை வைத்திருக்கும் திமுக தலைமை தாங்க வேண்டுமா என எழுப்பியிருக்கும் கேள்வி கூட்டணிக்குள் இருக்கும் விரிசலை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
திமுக தலைவர்கள் எவ்வளவு தரக்குறைவாக பேசினாலும், என்னமாதிரியான விமர்சனங்களை வைத்தாலும் திமுகவுடனே கூட்டணி என்பதில் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட ஒரு சிலர் விரும்புகின்றனர். ஆனால் அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் தலைவர்கள், திமுக தங்களது தன்மானத்தை சீண்டுவதாகவும், அதனை பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கின்றனர். தொடர் தோல்விகளை சந்தித்து வருவதோடு, கூட்டணிக்கு பெரும் சுமையாக இருக்கும் காங்கிரஸை தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகவே கழட்டி விடுவதற்கான முயற்சி தான் திமுகவின் இந்த செயல்பாடு என்ற விமர்சனமும் அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது.
















