சரிகம நிறுவனம் வசம் உள்ள 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை உரிமை தங்களுக்கே சொந்தம் என சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, அந்தத் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து, உலகளாவிய மற்றும் நிரந்தரமான காப்புரிமையைத் தாங்கள் பெற்றுள்ளதாகவும்,
இளையராஜா இந்தப் பாடல்களை தனது சொந்தப் பாடல்கள் எனக் கூறி அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ் மற்றும் ஜியோ சாவன் போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என சரிமக நிறுவனம் வாதிட்டது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சரிகம நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த தடை விதிக்கப்படவில்லை என்றால், சரிகம நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
















