ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு சுங்க கட்டணம் விதிப்பது தொடர்பாக சீனா மற்றும் வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. ஈரானின் இந்த முடிவு மத்திய கிழக்கில் அமைதிக்கு வழிவகுக்குமா? அல்லது மீண்டும் பதற்றத்துக்கு வித்திடுமா? என்பதை விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்.
ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாக சர்வதேச அளவில் 30 சதவீத கச்சா எண்ணெய் விநியோகம் நடைபெறுகிறது. தினந்தோறும் 17 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹோர்முஸ் நீரிணையில், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி சுங்கக் கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் ஆண்டுக்கு 40 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் ஈரானுக்கு வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஏற்கெனவே துருக்கி கட்டுப்பாட்டில் உள்ள டார்டெனல்ஸ் ((Dardanelles)) நீரிணையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை போல, ஹோர்முஸ் நீரிணையிலும் கட்டணம் வசூலிக்க இருப்பதாக ஈரான் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளது.
அந்த வகையில், ஹோர்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டண வசூலிக்கும் முறை அமலுக்கு வந்தால், அதன் மீதான ஈரானின் கட்டுப்பாடு இன்னும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இதுதொடர்பாக வளைகுடா நாடுகளுடனும், சீனா உடனும் ஈரான் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும், இந்த ஒப்பந்தத்தில் வளைகுடா நாடுகளும் அங்கம் வகித்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக கிடைக்கும் வருவாயைப் பகிர்ந்துகொள்வதில் ஈரான் தயாராக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே ஓமனில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகெர் காலிபாஃப் ((Mohammad Bagher Ghalibaf)), “ஹோர்முஸ் நீரிணை நிர்வாகம் இதற்கு முன் இருந்த நிலைமைக்கு மீண்டும் திரும்பாது” என கூறியதில் இருந்து, அங்கு சுங்க கட்டணம் வசூலிப்பதில் ஈரான் உறுதியாக இருப்பதை உணரலாம்.
அமெரிக்கா- ஈரான் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் காரணமாக ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது. போருக்கு முன் தினமும் 130 சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த சூழலில், தற்போது 70 கப்பல்கள் கடந்து வருகின்றன. ஹோர்முஸ் நீரிணை வழியாக இதுவரை சுமார் 30 கப்பல்கள் இந்தியா வந்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை வரும் நாள்களில் அதிகரித்து, ஹோர்முஸ் நீரிணை இயல்பு நிலையை விரைவில் எட்டும் என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளையில், அங்கு ஈரான் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஈரானின் இந்த முடிவு அபாயகரமானது என்றும், இதே பாணியில் பிற நாடுகளும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள நீரிணைகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க இந்த முடிவு வழிவகுத்துவிடும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடல் வழித்தடத்தில் சுங்கக் கட்டணம் விதிக்க எந்தவொரு நாட்டுக்கும் தார்மீக உரிமை இல்லை என கூறிய மார்கோ ரூபியோ, சுங்கக் கட்டண ஒப்பந்தத்தை ஒருபோதும் ஏற்க இயலாது என திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தின்படி ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறந்துவிட்டது. இருப்பினும், அதில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஒப்பந்தத்தில் ஏதும் நிபந்தனை இல்லாத பட்சத்தில், இந்த விவகாரம் சுமுகமான முறையில் தீர்த்து வைக்கப்படுமா? அல்லது மீண்டும் ஒரு போருக்கு வித்திடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…
















