தமிழக சரித்திரத்தில் 73 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியதில்லை என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய தவெக சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், கடந்த ஆட்சி காலத்தில் பட்டா முறையாக வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முன்னாள் அமைச்சரும், திமுக உறுப்பினரமான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கடந்த 5 ஆண்டுக் காலத்தில் மட்டும் 73 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பட்டா கொடுப்பதற்கு தகுதியுள்ள இடம், தகுதி இல்லாத இடம் என பிரிப்பவர்களுக்கு தெரியும் என்றும், உறுப்பினர் பொத்தம் பொதுவாக கூறக்கூடாது எனவும் தெரிவித்தார். ஒவ்வொரு அரசாங்கமும் பட்டா வழங்க தான் முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், கடந்த வருடங்களில் தமிழக வரலாற்றில் 73 லட்சம் பேருக்கு ஸ்டாலின் தான் பட்டா வழங்கியதாகவும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அவை முன்னவர் செங்கோட்டையன், முதலில் 73 ஆயிரம் என்றார்கள், பின்னர் 73 லட்சம் என்று கூறுகிறார்கள் என விமர்சித்தார். இதுவரை தமிழக சரித்திரத்தில் 73 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியதில்லை என்றும், 7 லட்சம் என்றால் சரி எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கமலி, பட்டா இருக்கிறது இடம் எங்கே என்று தன்னிடம் மக்கள் கேட்பதாகவும், பட்டா போட்டதற்கு இடம் வழங்குவதாக கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பான மனுக்களை தானே வாங்கி சேகரித்து வைத்துள்ளதாகவும் அமைச்சர் கமலி கூறினார்.
இதனை அடுத்து பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், பட்டா வழங்கப்பட்டு இடம் வழங்கப்படவில்லை என்ற குறைபாடுகள் தன்னுடைய கவனத்தில் இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
















