ஐரோப்பாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகப்பெரிய ஆபத்தாக மாறி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் சவால்களையும் அலசுகிறது இந்த செய்தித்தொகுப்பு…..
ஐரோப்பாவில் குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், குழந்தை பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. இதனால் பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஸ்பெயின் நாட்டின் விலார்தேவோஸ் (Vilardevos) கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் 700 குழந்தைகள் படித்து வந்த நிலையில், தற்போது 31 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். பெரும்பாலான கிராமங்களில் உள்ள வீடுகளில் யாரும் இல்லாததால் விற்பனைக்கு தயாராக உள்ளன. எஞ்சியிருக்கும் வீடுகளில் முதியோர் மட்டுமே வசித்து வருகின்றனர்.
இந்த நிலை ஸ்பெயினில் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. அங்கும் முதியோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒரு நாட்டின் மக்கள்தொகையை நிலையாக வைத்திருக்க சராசரி குழந்தை பிறப்பு விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும். ஆனால் 2024-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் 1.34 ஆகவும், ஸ்பெயினில் 1.1 ஆகவும் சரிந்துள்ளது. அமெரிக்காவில் குழந்தை பிறப்பு விகிதம் 1.6 என்ற அளவில் குறைந்துள்ளது.
நீண்டகாலம் கல்வி கற்பது, அன்றாட வாழ்க்கைக்கான செலவு அதிகரிப்பு , வீடுகளின் விலை உயர்வு, நிரந்தரமான வேலை அமையாதது உள்ளிட்ட காரணங்கள் குழந்தை பிறப்பு விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
மேலும், பெண்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களால் தாமதமாகக் குழந்தைகளைப் பெற விரும்புவதும், குழந்தை வளர்ப்புக்கு பொருளாதார ரீதியாகத் தயாராக இருக்க வேண்டும் என கருதுவதும் பிறப்பு விகித சரிவுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சியாக ஜெர்மனி, ஹங்கேரி போன்ற நாடுகள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் பராமரிப்பு மையங்களை விரிவுபடுத்தின. மேலும், வரிச் சலுகைகளையும், ஊக்கத்தொகையையும் வழங்கின. ஆனால் இதற்கு மிகப்பெரிய பலன் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஸ்பெயினில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வால், அந்நாட்டின் மக்கள்தொகை 50 மில்லியனாக அதிகரித்துள்ளது.
2019 முதல் 2024 வரை ஸ்பெயினின் வேலைவாய்ப்பு வளர்ச்சியில் 70 சதவீதம் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பே ஆகும். இதனால் ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்ந்தோரை முறைப்படுத்துவதில் ஸ்பெயின் தீவிர கவனம் செலுத்துகிறது. ஆனால், வெளிநாட்டினர் குடியேற்றத்தால், பள்ளிகள், வீடுகள் மற்றும் பொதுச்சேவைகளில் ஸ்பெயின் அரசுக்கு அழுத்தம் அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மறுபுறம், இங்கிலாந்தின் ‘லூடன்’ (Luton) போன்ற சில நகரங்களில் வெளிநாட்டினர் குடியேற்றம் அதிகரிப்பால், குழந்தை பிறப்பு விகிதம் 2.0 என்ற அளவில் உள்ளது. அதேசமயம் புலம்பெயர் தொழிலாளர்களின் குடிவரவு அரசியல் ரீதியான எதிர்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
ஐரோப்பாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் அங்கு வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது பொருளாதார அடித்தளத்தையே இது கேள்விக்குள்ளாக்குகிறது. குறைந்த பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தொலை நோக்கு திட்டங்கள் வகுக்கப்படாவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரமும் அரசியல் நிலைத்தன்மையும் மிகப்பெரிய அபாயத்தை சந்திக்க நேரிடும் சூழல் உருவாகும் என்பது அரசியல், பொருளாதார வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.
















