நவோதயா பள்ளிகளை நிறுவ அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், மாநில அரசின் சொந்த சட்டங்களுக்கு முரணான மத்திய அரசின் நிர்வாக கொள்கைகளை செயல்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.
ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவுவதை கட்டாயமாக்கவோ, தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாநில அரசைக் கட்டாயப்படுத்தவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளது.
நிலக் கொள்கை, மேலாண்மை மற்றும் உரிமை மாற்றம் போன்றவை மாநிலத்தின் விருப்புரிமைக்கு உட்பட்டவை என்றும், ஒரு மாநிலத்திடம் அதன் நிலத்தை ஒப்படைக்கவோ அல்லது ஒதுக்கீடு செய்யவோ கட்டாயப்படுத்தி நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு நிலத்தை அடையாளம் காணுமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
















