நகராட்சி துறை அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக, ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை கடிதம் எழுதியும்,
முந்தைய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்ததாக வாதிட்டார்.
மேலும், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அதிமுக எம்பி இன்பதுரை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி நேருவுக்கு நோட்டீஸ் அனுப்பியும், அந்த அவகாசத்தை பயன்படுத்தாமல், பதிலளிக்க அவகாசம் வழங்கவில்லை என இந்த மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்யும்படி பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
















