‘கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தனியார் கல்லூரியில் சிசு கொலை, கரு கலைப்பு தடுப்பு தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பங்கேற்றார். கரு கலைப்பை சட்டமாக்கியதால் ஒவ்வொரு ஆண்டும் 1.56 கோடி கருக்கலைப்பு நடைபெறும் எனக் கூறி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? என வினவியுள்ளார்.
‘கருக்கலைப்பு ஒரு கொலை’ என்ற ஊர்வலத்தில் சபாநாயகர் பங்கேற்றது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு விடும் சவால் என கடுமையாக சாடியுள்ளார்.
மத அடையாளத்திற்காக பெண்கள் உரிமைகளோடு விளையாடும் சபாநாயகரின் பிற்போக்குத்தனமான போராட்டம் நவீன சமூகத்திற்கு அச்சுறுத்தல் என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கருக்கலைப்பு என்பது பெண்களின் அடிப்படை உரிமை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆனால், சபாநாயகர் ஒரு மதவாத நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரிப்பது அவர் வகிக்கும் பதவியின் மாண்பை குலைப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
நாட்டின் சட்டத்தை விட தனிப்பட்ட மத கோட்பாடுகளுக்கே சபாநாயகர் முக்கியத்துவம் அளிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சமூக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் சபாநாயகரின் இத்தகைய செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
















