இடமாற்றம் மற்றும் நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றம் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் இடையே பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தவெக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், இடம் மாறி இருப்பதால் துதி பாட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய ஓ.பி எஸ், செங்கோட்டையன் தான் முதலில் இடம் மாறியவர் என்பதை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், இடத்தை மாற்றினாலும், அமைச்சரின் நெஞ்சில் இருக்கும் படத்தை மாற்ற வேண்டாம் என கூறியவர் முதலமைச்சர் விஜய் என்றும், ஆனால் ஓபிஎஸ் இடம் மாறியதுடன் படத்தையும் மாற்றி இருப்பதாகவும் கூறினார்.
அப்போது பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தன் மனதில் இருப்பதாகவும், படத்தை காட்டி ஏமாற்றும் பழக்கம் தனக்கு இல்லை எனவும் திட்டவட்டமாக கூறினார். மேலும், நிதிநிலை அறிக்கை குறித்து பேச வந்ததாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், படத்தை வைத்துக்கொண்டு ஏமாற்றாதீர்கள் என்று கூறுவது கொச்சையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது என கூறினார்.
அப்போது பேசிய ஓபிஎஸ், முன்னாள் முதலமைச்சருக்கு நன்றி கூறவே தாம் புகைப்படத்தை வைத்து இருப்பதாகவும், தாம் இந்த இடத்தில் இருப்பது அவரால்தான் எனவும் தெரிவித்த நிலையி வாக்குவாதம் முடித்துவைக்கப்பட்டது.
















