போரில் உயிரிழந்த 52 ஆயிரம் பேருக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள தகவலில், ஈரான் அணு ஆயுதத்தை பெறக்கூடாது என்பதற்காகவே ராணுவ மோதல் துவங்கியது என்றும், தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு கோருவதை தாம் அறிந்ததாகவும் கூறியுள்ளார்.
இது ஒரு சுவாரஸ்யமான யோசனைதான் எனக்கூறியுள்ள அவர், ஈரான் நடத்திய போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோருக்காக தாமும் ஈரானிடமிருந்து இழப்பீடு கோருகிறேன் என தெரிவித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் ஈரான் கொன்ற லட்சக்கணக்கான அப்பாவிப் போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், இதில் கடந்த ஐந்து மாதங்களில் கொல்லப்பட்ட 52 ஆயிரம் பேரும் அடங்குவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் இந்தக் கோரிக்கையை உறுதியாக முன்வைக்குமாறு தனது பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
















