கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு நெருங்கிய நபரான ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், டெல்லியில் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாகப் பணியாற்ற, கர்நாடகாவைச் சேர்ந்த . கே. வெங்கடநாராயணனை நியமிப்பதாக ஜோசப் விஜய் அரசு வெளியிட்ட அறிவிப்பு அதிர்ச்சியளிப்பது மட்டுமல்லாமல், பல கேள்விகளையும் எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட வேண்டிய இவ்வளவு முக்கியமான ஒரு பொறுப்பில், தமிழ்நாட்டுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஒருவரை எப்படி நியமிக்க முடியும்?
நமது தாய்மொழியான தமிழையோ அல்லது நமது தமிழ்ப் பண்பாட்டையோ முழுமையாக அறியாத ஒருவரால், டெல்லியில் தமிழ்நாடு மக்களின் விருப்பங்களையும் தமிழ்நாடு அரசின் குரலையும் எவ்வாறு திறம்பட எதிரொலிக்க முடியும்?
சட்டம் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளில் நன்கு தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரைத் தவிர்த்துவிட்டு, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரின் நெருங்கிய நண்பரை ஏன் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும்?
அவர், விஜய் நடிக்கும் திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதனாலா? அல்லது காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தின் காரணமா?
மேட்டூர் அணை விவகாரத்தைத் தீர்க்கக் கூட்டணி கட்சியான காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, டெல்லிக்குக் கடிதம் எழுதுவதோடு நில்லாமல்இப்போது கூட்டணி கட்சியின் அழுத்தத்திற்குப் பயந்து, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை டெல்லிக்கு அனுப்பிவிட்டுத் தமிழர்களின் நலனைப் புறக்கணிப்பதா உண்மையான அதிகாரம்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாற்று சக்தி என்று கூறிக்கொண்டு, காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்பட்டுத் தமிழ்நாட்டை இவ்வாறு ஏமாற்றுவதற்கு ஜோசப் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
















