திருச்செந்தூர் அருகே அமைச்சர் ஸ்ரீநாத் முன்னிலையில் தவெகவினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காயல்பட்டிணம் நகராட்சி ஓடக்கரை பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று அப்பகுதி மக்கள் திமுக எம்.பி கனிமொழியிடம் கோரிக்கை விடுத்து வாக்குவாதம் செய்தனர்.
இதுதொடர்பான செய்தி வெளியான நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், அப்பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர், ஓடக்கரையில் உள்ள சுகாதார மையத்திற்கு செல்வதற்கு சரியான பாதை இல்லை என்று மக்கள் தெரிவித்தனர்.
உடனடியாக அமைச்சர் அங்கு சென்றபோது, பாதை குறுகியதாக இருந்ததால் உடன் சென்ற தவெக நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து அமைச்சர் ஸ்ரீநாத் மட்டும் உள்ளே சென்ற நிலையில், வெளியே நின்று கொண்டிருந்த தவெக நிர்வாகிகள் இரண்டு பிரிவினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஒரு தவெக நிர்வாகி ஆவேசமடைந்து மற்றொரு நிர்வாகியை அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
















