சென்னை தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்தில் உள்ள அஞ்சுகம் பூங்கா அண்மையில் சீரமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் தற்போதைய நிலை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியின் செம்பாக்கம் மண்டலத்தில் உள்ளது அஞ்சுகம் அம்மையார் பூங்கா… அண்மையில் பூங்காவை சீரமைத்ததாக கூறி பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவையனைத்தும் வெறும் கண்துடைப்புக்காக செய்யப்பட்டவை என்பதே பொதுமக்களின் புகாராக உள்ளது… நடைப்பயிற்சிக்கான நடைபாதை முறையாக அமைக்கப்படவில்லை என்றும், கழிவறை வசதி கூட ஏற்படுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள் இவர்கள்…
பூங்காவில் உள்ள குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், இறகு பந்து விளையாட்டு திடல் சீரற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பூங்காவில் கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படும் நூலக கட்டிடம், 6 மாதங்கள் கடந்தும் பூட்டிய நிலையிலேயே இருப்பதாக கூறுகின்றனர் பொதுமக்கள்…
பணிகளே நிறைவடையாத நிலையில், அமைச்சர் தா.மோ. அன்பரசன் கண்ணை மூடிக்கொண்டு திறந்து வைத்துள்ளதாகவும், பூங்கா சீரமைப்பு என்ற பெயரில் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் அதிமுக முன்னாள் எம்.பி.யான சிட்லபாக்கம் ராஜேந்திரன்….
பூங்காவை சீரமைத்துவிட்டதாக வெறுமனே கணக்கு காட்டுவதை விட்டுவிட்டு, பணிகளை முறையாக, விரிவாக மேற்கொள்ள வேண்டும் என்பதே செம்பாக்கம் மக்களின் கோரிக்கை…
















