திருவாரூரில் அரசால் கண்டு கொள்ளப்படாத திருவிக மணிமண்டபத்தை
பொதுமக்கள் சீரமைத்து கொடுத்தும் மீண்டும் சிதிலமடைந்து காணப்படும் அவலம் நிலவுகிறது.
திருவாரூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 1973ஆம் ஆண்டு திருவிக-வின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து அந்த இடத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டது.
ஆனால் மணிமண்டபம் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாகக் காட்சியளித்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு “நூர் முகமது நண்பர்கள் சமூக சேவை” என்ற இயக்கத்தால் சீரமைக்கப்பட்டு திருவாரூர் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும், முறையாக பராமரிக்காமல் உள்ளதால், தற்போதும் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமீபத்தில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு, “முத்தமிழ் அறிஞர் கலைஞர் நகர்புற பேருந்து நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
ஆனாலும் திரு.வி.க மணிமண்டபம் சீரமைக்கப்படாமல் சேதம் அடைந்தே காணப்படுவது திருவாரூர் பகுதி மக்கள் மட்டுமல்லாமல் தமிழ் ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
















