தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தவெக நிர்வாகி நிர்மல் குமார் புகார் மனு அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது :, தற்போது, 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் மாநிலம் முழுவதும் தீவிரமாக விஜய் ஈடுபட்டு வருகிறார். அவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
30/03/2026 அன்று, பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ததையடுத்து, தேவையான அனுமதிகளைப் பெற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அன்று, பெரம்பூரில் நடைபெற்ற பிரசாரத்தை முடித்த பின்னர், அடுத்த பிரசார நிகழ்விற்காக கொளத்தூர் தொகுதிக்குச் செல்லும்போது, பாதுகாப்பான மற்றும் தடையற்ற VIP வாகன அணிவகுப்பிற்காக தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பது கவலையுடன் கவனிக்கப்பட்டது.
போலீஸ் எஸ்கார்ட், போக்குவரத்து கட்டுப்பாடு, வழிநடத்தல் ஆகியவை இல்லாத காரணத்தால், பொதுமக்கள் பெரும் திரளாக கூடிவிட்டதால், திரு. விஜய் அவர்களின் வாகன அணிவகுப்பு நீண்ட நேரம் சிக்கிக் கொண்டது. இதனால் அவருக்கும் பொதுமக்களுக்கும் தேவையற்ற ஆபத்து ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.
அவரது பிரசார கூட்டங்கள் பெரும் மக்களைக் கவர்ந்து வருவதையும் கருத்தில் கொண்டு, ‘Y’ வகை பாதுகாப்பு பெறும் நபராக இருப்பதால், சென்னை போலீசிடம் பலமுறை போதுமான பாதுகாப்பு, கூட்ட நிர்வாகம் மற்றும் பாதுகாப்பான நகர்வு ஏற்பாடுகளை செய்யுமாறு கோரியிருந்தோம். ஆனால் இதுவரை எந்த பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கொளத்தூர் பிரசார நிகழ்வில், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடுமையான குறைபாடுகள் இருந்தது. குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் மட்டுமே பணியில் இருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புச்சுவர்கள் (barricades) அமைக்கப்படவில்லை. கூட்ட நிர்வாகம் முறையாக செய்யப்படவில்லை.
முக்கியமாக, பாதுகாப்பு வட்டாரம் (sterile zone) உருவாக்கப்படாததால், பிரசார வாகனம் பொதுமக்களால் முற்றிலும் சூழப்பட்டு, பெரும் நெரிசல் ஏற்பட்டது.
மேலும், பிரசாரத்திற்காக அமைக்கப்பட்ட ஒலி அமைப்புகள் அகற்றப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், கூட்டமாக வந்த பொதுமக்கள் உரையை கேட்க முடியாமல் முன் நோக்கி நெருங்கினர். இதனால் கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்து விபத்து அபாயம் ஏற்பட்டது.
மேலும், ஏற்கனவே நெரிசலான இடத்திற்கு பெரிய பேருந்துகள் அனுப்பப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் குழப்பமும் நெரிசலும் அதிகரித்தது.
இந்த அனைத்து பாதுகாப்பு குறைபாடுகளும் பொதுமக்களுக்கும் பாதுகாக்கப்படும் நபரான திரு. விஜய் அவர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சென்னை போலீசார் மேற்கொண்ட பாதுகாப்பு திட்டமிடல் மற்றும் அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான தவறுகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
















