மதுரை சித்திரை திருவிழாவை ஒட்டி மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நேற்று காலை விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில் மணக்கோல அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் வெள்ளி யானை வாகனத்திலும் மணப்பெண் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் அனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளினர்.
தொடர்ந்து கோயில் யானை முன்னே செல்ல, சிவ வாத்தியங்கள் முழங்க நான்கு மாசி வீதிகளில் அம்மனும், சுவாமியும் பவனி வந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
















