பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க முயன்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பாட்டியாலா மாவட்டம் ராஜ்புரா நகருக்கு அருகே ரயில் தண்டவாளத்தை நேற்றிரவு வெடி வைத்து தகர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியில் ஈடுபட்ட நபர், வெடிகுண்டை வைக்க முயன்ற போதே அது வெடித்ததில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாட்டியாலா சரக டி.ஐ.ஜி மற்றும் மூத்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து உயிரிழந்த நபரின் உடலை மீட்ட போலீசார், சம்பவ இடத்திலிருந்து உயிரிழந்த நபரின் சிம் கார்டு மற்றும் சில அறிவியல் ரீதியான ஆதாரங்கள் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தண்டவாளத்திற்கோ அல்லது பிற பொதுச் சொத்துகளுக்கோ சேதம் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















