கடந்த 2022 உலகக் கோப்பையில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அணி மொராக்கோ. ஆப்பிரிக்க கால்பந்தின் முகவரியையே மாற்றிய அந்த அணி, மீண்டும் வரலாறு படைக்கும் கனவோடு களமிறங்கியுள்ளது. ஆனால் இந்த முறை எதிரில் இருப்பது, உலக சாம்பியனான பிரான்ஸ். யார் அரையிறுதிக்குள் நுழைவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த மோதல் குறித்து விரிவாக பார்க்கலாம்…
மொராக்கோ… உலக கால்பந்து போட்டியில் இந்தப் பெயரைக் கேட்டாலே அதன் போராட்டமும் சாதனையும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். கடந்த உலகக் கோப்பையில், முதல் ஆப்பிரிக்க நாடாக அரையிறுதிக்குள் நுழைந்து சரித்திரம் படைத்தது மொராக்கோ. அந்த சாதனை வெறும் அதிர்ஷ்டம் அல்ல என்பதை மீண்டும் நிரூபிக்க இந்த உலகக் கோப்பையிலும் அதே உத்வேகத்துடன் களமிறங்கியுள்ளது.
இந்த முறையும் மொராக்கோவின் பயணம் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. நெதர்லாந்து போன்ற பலம் வாய்ந்த அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அந்நாடு, அடுத்ததாக கனடாவை 3க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. தாக்குதலிலும், தற்காப்பிலும், ஒற்றுமையிலும், தங்களது தரத்தை உயர்த்திக் கொண்டே செல்கிறது மொராக்கோ அணி.
இப்போது மொராக்கோவின் முன் நிற்பது உலக சாம்பியனான பிரான்ஸ்.
பிரான்ஸ் என்றாலே உலகத் தரம் வாய்ந்த வீரர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். அதன்படி, கிலியன் எம்பாப்பே தலைமையில் வேகமான தாக்குதல், அனுபவம் வாய்ந்த மிட்ஃபீல்டு, உறுதியான பாதுகாப்பு என சமநிலை கொண்ட அணியாக அந்த அணி இந்தமுறை களமிறங்கியுள்ளது. நாக் அவுட் சுற்றில் பாரகுவேவை 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் முன்னேறிய பிரான்ஸ், மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் இலக்குடன் பயணிக்கிறது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2022 உலகக் கோப்பை அரையிறுதியில் இதே பிரான்ஸிடம் 2க்கு 0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது மொராக்கோ. அந்த தோல்வியானது உலகக் கோப்பை இறுதிப்போட்டி கனவை முடிவுக்குக் கொண்டு வந்தாலும், உலக ரசிகர்களின் மனதில் மொராக்கோவுக்கு ஒரு தனி இடத்தை உருவாக்கியது.
இப்போது அதே பிரான்ஸை மீண்டும் எதிர்கொள்கிறது மொராக்கோ. இது வெறும் காலிறுதி அல்ல. நான்கு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தோல்விக்கான பதிலடி கொடுப்பதற்கான நல்ல வாய்ப்பும்கூட.
மொராக்கோவின் பலமே அதன் ஒற்றுமை தான். ஒரே ஒரு நட்சத்திர வீரரை நம்பாமல், ஒட்டுமொத்த அணியும் ஒன்றாக போராடும் குணம்தான் அவர்களின் மிகப்பெரிய பலம். கோல் கீப்பர் யாசின் புனோவின் அசத்தலான சேவ்கள், அஷ்ரப் ஹகீமியின் வேகமான ஓட்டம், ஊனாஹியின் மிட்ஃபீல்டு கன்ட்ரோல், ரஹிமியின் கோல் அடிக்கும் திறன் என அசுர பலத்துடன் நிற்கிறது, மொராக்கோ. .
மறுபுறம் உலகின் மிகவும் ஆபத்தான தாக்குதல் வீரர்களில் ஒருவராக திகழும் எம்பாப்பே தலைமையில் களமிறங்கியுள்ளது பிரான்ஸ்.
ஒரு சிறிய தவறைக்கூட பெரிய கோலாக மாற்றும் திறன் எம்பாப்பே-வுக்கு இருக்கிறது. அதோடு, அனுபவம் நிறைந்த வீரர்கள் பலரும் பிரான்ஸ் அணியில் இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
புள்ளிவிவரங்கள், உலக தரவரிசை, அனுபவம் என அனைத்தும் பிரான்ஸின் பக்கம் இருக்கலாம். ஆனால் உலகக் கோப்பை வரலாறு திரும்ப திரும்ப சொல்வது ஒன்றைதான். அது, மன உறுதியும், ஒற்றுமையும் இருந்தால் எந்த அணியையும் அசைத்து பார்க்கலாம்.
அதனால்தான் இந்தப் போட்டி வெறும் பிரான்ஸ் – மொராக்கோ இடையேயான மோதலாக மட்டும் பார்க்கப்படவில்லை. மாறாக,
ஒரு பக்கம் உலக சாம்பியனின் ஆதிக்கம், மறுபக்கம் மீண்டும் வரலாறு எழுதத் துடிக்கும் ஒரு நாட்டின் கனவு. இவற்றிற்கிடையேயான போராக இந்த போட்டி கருதப்படுகிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோ சாதித்து உலகை ஆச்சரியப்படுத்துமா? அல்லது அனுபவம் வாய்ந்த உலக சாம்பியனான பிரான்ஸ் மீண்டும் தனது வலிமையை நிரூபிக்குமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லப்போகும் 90 நிமிட ஆட்டத்தையே கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
















