நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, 2,843 கி.மீ., நீளமுள்ள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தின் பணி முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
பயணியர் ரயில் செல்லும் பாதையிலேயே சரக்கு ரயிலும் செல்வதால், உரிய நேரத்தில் சரக்குகளை எடுத்துச் சென்று சேர்ப்பதில் தாமதம் நிலவுவதாக கூறப்பட்டது.
அதே சமயம், சரக்கு ரயில்களால் பயணியர் ரயில் சேவை பாதிக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து, பிரத்யேக சரக்கு ரயில் தடம் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க, அரசு முடிவு செய்தது.
இதற்காக, கிழக்கு பிரத்யேக சரக்கு வழித்தடம், மேற்கு பிரத்யகே சரக்கு வழித்தடம் என, இரண்டு முக்கிய சரக்கு ரயில் வழித்தடங்கள் அமைக்கும் பணியை ரயில்வே அமைச்சகம் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
மொத்தம், 2,843 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த இரு வழித்தடங்களும், 1.24 லட்சம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டன. இதில், 1,337 கி.மீ., நீளமுள்ள கிழக்கு வழித்தடம் ஏற்கனவே முடிக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்தது.
மொத்தம், 1,506 கி.மீ., நீளமுள்ள மேற்கு வழித்தடத்தில், எஞ்சியிருந்த, 326 கி.மீ., நீளமுள்ள மூன்று முக்கிய பிரிவுகளை, குஜராத்தின் வதோதராவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதன் மூலம் நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, 2,843 கிலோ மீட்டர் நீளமுள்ள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தின் பணி முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















