முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தோல்வியடைந்ததை மறைக்க முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் இணைந்து நாடகம் நடத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :
இன்று பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாள். இந்த 74வது பிறந்த நாளை சேவை வாரங்களாக கடைப்பிடிப்பது வழக்கம். இன்று தொடங்கி அக்டோபர் இரண்டாம் தேதி வரை பாஜக சார்பில் பல்வேறு சேவை பணிகளை செய்ய இருக்கிறோம்.
இன்று இந்தியா முழுவதும் மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள் நடைபெறுகிறது. பிரதமரின் பிறந்தநாள் சேவை தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
உலகத்திலேயே அதிகமான உறுப்பினர்களை கொண்ட கட்சி பாஜக கட்சி. சுமார் 10 கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாஜக. இந்த ஆண்டு 11 கோடி உறுப்பினர்களை இலக்காக கொண்டு பாஜக பயணித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணியோடு எங்களது பணி நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு தமிழக மக்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.
மூன்றாவது முறையாக பிரதமர் மோடிக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்
பாஜக சார்பில் ஒருமுறை இஸ்லாமியரையும், மறுமுறை பட்டியல் இனத்தவரையும், மூன்றாவது முறை திரௌபதி முர்மு அவர்களையும் பிரதமர் மோடி குடியரசு தலைவராக தேர்வு செய்துள்ளார்.
சமூக நீதியின் தந்தையாக பிரதமர் கருதப்படுகிறார். விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மற்ற நிகழ்ச்சிகளுக்கு வாழ்த்து சொல்கிறார். விஜய் பொதுவான ஆளாக இருப்பார் என்பதில் நம்பிக்கை இல்லை.
முதலமைச்சரின் அமெரிக்கா பயணத்தில் முதலீடு தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. அதை மறைக்க வேண்டிய திருமாவளவனும் முதலமைச்சர் ஸ்டாலினும் கடந்த நான்கு நாட்களாக அரசியல் நாடகம் நடத்தி வருகிறார்கள். அமெரிக்கா பயணத்தின் பற்றி பொதுமக்கள் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக திருமாவளவனும், முதலமைச்சரும் இணைந்து நாடகத்தை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தை இந்தியாவிலேயே போட்டிருக்க முடியும். எதற்கு முதலமைச்சர் அமெரிக்கா செல்ல வேண்டும்? முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் தோல்வி பயணம். அடைந்துள்ளது. 3 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளை ஊக்குவித்தது தான் தமிழக அரசின் சாதனை என எல்.முருகன் தெரிவித்தார்.