செழுமை, கலாச்சாரம், பாரம்பரியத்தின் சின்னமாக சிக்கிம் மாநிலம் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சிக்கிம் மாநிலமாக உருவானதன் 50வது உதய தின விழா காங்டாக் பகுதியில் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்கவிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக மேற்குவங்கம் மாநிலம் பாக்டோக்ரா சென்றடைந்தார்.
பின்னர், அங்கிருந்து காணொலி வாயிலாக சிக்கிம் மாநிலத்தின் 50வது உதயதின விழாவில் கலந்து கொண்டார். அப்போது, சிக்கிம் மாநிலத்தின் 50ஆம் ஆண்டு நினைவு நாணயம் மற்றும் முத்திரையை சிக்கிம் முதலமைச்சர் தமங் மற்றும் ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர் ஆகியோர் பிரதமர் மோடி முன்னிலையில் வெளியிட்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சிக்கிம் மாநிலம் தனக்கென ஒரு ஜனநாயக எதிர்காலத்தை 50 ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானித்துள்ளதாகவும், கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவை ஒளிரச் செய்த நட்சத்திரங்கள் சிக்கிமில் இருந்து தோன்றியதாகவும் தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்தின் முன்மாதிரியாக சிக்கம் மாறியுள்ளதாகவும் கூறினார். மேலும், அதிக தனிநபர் வருமானம் கொண்ட இந்திய மாநிலங்களில் ஒன்றாக சிக்கம் உள்ளது என்றும், இது சிக்கிம் மக்களின் திறன் மற்றும் உறுதிப்பாட்டிற்கு சான்றாக உள்ளது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.