இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்த நிலையில், ஜி-7 மாநாட்டில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதியில் வெளியேறினார்.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் ஜி7 மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ள இந்த மாநாடு இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதலை தணிக்கக் கோரும் வரைவு கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்தார்.
அதுமட்டுமின்றி ஜி7 மாநாடு முடிவடைவதற்கு ஒருநாள் முன்பாகவே டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அத்துடன் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலை வெள்ளை மாளிகையின் சிச்சுவேஷன் அறையில் தயாராக இருக்கவும் அவர் உத்தரவிட்டார்.
அண்மையில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரக கட்டடம் சேதமடைந்தது. இதற்குப் பதிலடியாக ஈரானின் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலைத் தொடங்கவுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.