திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு களவாடப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் இளம் பெண்களை அனுமதியின்றி புகைப்படம் எடுத்து, ஆபாசமாக மாற்றி, ஆன்லைனில் விற்பனை செய்த திமுக பிரமுகர் கலைவாணனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, திருச்சியில் திமுக வட்டச் செயலாளர் காளை உட்பட 15 பேரால் ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கொடூரமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
திமுக அரசின் கோர முகத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. காமவெறி பிடித்து அலையும் மிருகங்களைக் கருப்பு சிவப்பு பட்டை அணிவித்து, ஆளுங்கட்சி எனும் திமிரை ஊட்டி வளர்த்து, கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையையும் ஏவல் துறையாக மாற்றி, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை சூறையாடச் செய்தது தான் அறிவாலய அரசின் ஒரே சாதனை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த லட்சணத்தில், உண்மையை மறைக்க, பல கோடி செலவழித்து தமிழகம் முழுவதும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என நாடக விழா நடத்துவது ஒன்று தான் கேடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடன்பிறப்புகளிடமிருந்து தங்களைக் காக்க இயலாத முதல்வர் ஸ்டாலின்
ஆட்சியை இனியொருமுறை அரியணையில் அமர்த்தமாட்டார்கள் எம் தமிழ்ப் பெண்கள் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
















