வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை அறிவாலய தலைவர்கள் தொடர்ந்து த் தூண்டி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், திமுக ஆட்சியில் ஏற்கனவே வட இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் “பானிபூரி விற்கவும், கட்டட வேலைக்கும், டேபிள் துடைக்கவும் தான் வடக்கர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள்” என திமுக அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் எள்ளி நகையாடியிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துளளார்.
தனது ஆணவப்பேச்சிற்குத் திமுக அமைச்சர் உடனடியாக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வாழ்வியல் தத்துவத்தின் மூலம் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் பறைசாற்றிய நமது தமிழ் மண்ணில், வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வைத் திமுக தலைவர்கள் தொடர்ந்து விதைக்க முயல்வது அருவருப்பானது மட்டுமன்றி ஆபத்தானதும் கூட என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, தெற்கு என இன ரீதியாக மக்களைப் பிரித்தாளத் துடிக்கும் திமுகவின் பிளவுவாத அரசியலை அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸும் கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆமோதிக்கின்றனவா? எனறும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இமயம் முதல் குமரி வரை” ஒருமித்த பண்பாட்டுக் கலாச்சாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் பாரதத்தில், ஆட்சியைப் பிடிக்கவும் அதிகாரத்தைக் கைப்பற்றவும் வட இந்திய மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தத் துடிக்கும் திமுக எனும் நஞ்சுக்கொடியை வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பிடுங்கி எறியப்போகிறார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















